இலங்கையின் பிரதமராக மீண்டும் ராஜபக்ச பதவியேற்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக வெளியான தகவலை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பிறகு மிகப் பெரிய அளவில் மக்கள் எழுச்சி திரண்டு அதிபரின் மாளிகை சூறையாடப்பட்டது. நாட்டை விட்டே அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார். இலங்கையில் நிலைமை சரியான பின்னர் மீண்டும் இலங்கை திரும்பினார். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவியையும் ராஜிநாமா செய்தார். பிறகு அந்நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக தினேஷ் குணவர்த்தன தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தினேஷ் குணவர்த்தனவை விலக்கி மஹிந்த ராஜபக்சேவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருகிற யோசனையை அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்வைத்துள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷன்ன ஜயசுமன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி:ஈரோடு இடைத்தேர்தலை காணொலி மூலம் கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
ஆனால் இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினேஷ் குணவர்த்தன பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது. மேலும், பதவியிலிருந்து தினேஷ் குணவர்த்தன விலகுமாறு பிரதமருக்கு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கைகளோ அல்லது அழுத்தங்களோ எழவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







