கும்பகோணத்தில் இரண்டரை வயது குழந்தையை அடித்துக்கொலை செய்த பெரியப்பா மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்த பூ வியாபாரி வினோத். இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த காயத்திரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனால், இவர்களை பார்த்து கொள்ளவும், உதவிக்காகவும் காயத்திரியின் சகோதரியான நிஷா திருச்சியில் இருந்து தனது குழந்தையுடன் கும்பகோணம் வந்தார்.
பின்னர் காயத்திரிக்கு உதவியாக மருத்துவமனையில் நிஷா தங்கியுள்ளார். அவரது இரண்டரை வயது மகன் ஜெகதீஸ்வரன் வினோத் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இரவு மதுபோதையில் வந்த வினோத், குழந்தையை அடித்துள்ளார். இதில் ஜெகதீஸ்வரன் மயங்கி விழுந்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், ஏற்கனவே குழந்தை ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து தெரியவந்ததும் கும்பகோணம் மேற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மதுபோதையில் பெரியப்பாவே குழந்தையை அடித்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்து வினோத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-இரா.நம்பிராஜன்








