ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சந்தித்து, கோரிக்கை மனுவையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு மக்கள் அவமதிக்கும் வகையிலும் நடக்கும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விரிவாக பிரதிநிதிகள் குழு எடுத்துரைத்தது.
குறிப்பாக கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்ட விதம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், சட்டப்பேரவையின் மாண்பை இழிவுபடுத்தியும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும், ஆளுநர் எழுந்து சென்ற விதம் குறித்து தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு விரிவாக எடுத்துரைத்துள்ளது.
இதனைதொடர்ந்து டெல்லி ரைசினா சாலையில் உள்ள டி.ஆர்.பாலுவின் இல்லத்தில், குடியரசு தலைவருடனான சந்திப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய எம்.பி டி.ஆர்.பாலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தை சட்ட அமைச்சர் ரகுபதி, குடியரசு தலைவரிடம் வழங்கியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், சட்டசபையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் மிக வருந்தத்தக்க செயல் என்பதையும், தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்னால் ஆளுநர் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்பதையும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.
அதேபோல, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, பின்னர் ஆளுநரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்துள்ளதையும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், சட்டப்பேரவை விதிமுறைகளுக்கு மாறாகவும் ஆளுநர் நடந்துகொண்டுள்ளார் என்பதையும் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்னர், ஆளுநரின் அரசியல் சாசன விதிமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும் கூறினார். மேலும் இந்த விவகாரம் அனைத்தையும் கவனமுடன் கேட்டு, பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதியளித்துள்ளதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.