தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக ஆளுநர் இன்று மாலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் சென்றடையும் அவர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை காலை ராமேசுவரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை தேவிப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து உரையாடுகிறார். எட்டிவயல் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார்.
இதையும் படிக்கவும் : தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி
தொடர்ந்து 19ம் தேதி (புதன்கிழமை) உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். தொடர்ந்து பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும், மாலையில் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு மதுரை வந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.
ஆளுநர் வருகையையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.







