தேனி பகுதியில், ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனியிலிருந்து சுப்பலாபுரத்திற்கு நாள்தோறும் அரசு பேருந்து 12 முறை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில், தினசரி நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த பேருந்தில், ஆள் இறங்கும் அளவுக்கு பெரிய ஓட்டை இருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பேருந்து மட்டுமல்லாமல், இதேபோன்று பழுதடைந்த பல பேருந்துகள், இந்த பகுதியில் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் பழுதடைந்த பேருந்துகளை மாற்றிவிட்டு, நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







