அரசுப் பேருந்து மோதி காவலர் மரணம் ! மகிழ்ச்சி செய்தி கேட்டு சொந்த ஊர் சென்றவருக்கு நடந்த சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் தபால் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது, அரசுப் பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த…

ராமநாதபுரம் மாவட்டம் தபால் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது, அரசுப் பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் குணா ராஜ். 35 வயதான இவர் சென்னை வளசரவாக்கத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தவர், குழந்தையை பார்ப்பதற்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தனது குழந்தையை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக ராமநாதபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தபால் சாவடி அருகே செல்லும்போது ராமேஸ்வரத்திலிருந்து, கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த குணராஜின் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் காவலர் குணராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது குழந்தையை பார்க்க வந்தபோது தந்தை விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.