பல வண்ணங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்!

நாமக்கல் அருகே பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும், பலவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று…

நாமக்கல் அருகே பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு
வருகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும், பலவிதமான விநாயகர் சிலைகள்
பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்து, நீர்நிலைகளில்
விஜர்சனம் செய்வது வழக்கம். நகர பகுதிகள் மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும்
சிலைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்று பூஜைகளும் செய்வார்கள்.

இந்தாண்டு வரும் செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட
உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலை
வைத்து வழிபட தயாராகி வருகின்றனர். இதற்காக முன்கூட்டியே விநாயகர் சிலைகள்
வாங்குவதற்கு ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், விநாயகர்
சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையத்தில் பல
வண்ண உருவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகின்றன.

மேலும், களிமண், கிழங்கு மாவில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிங்கம், மயில், மான்,
எலி போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும் பாலவிநாயகர், கற்பக
விநாயகர், செல்வ விநாயகர், ஆனந்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில்
விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, உயரத்திற்கு ஏற்றவாறு 50 ரூபாய் முதல்
அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்
மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்து சிலை வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து சிலை தயாரிப்பாளர் பிரபாகரன் கூறுகையில், மூன்று தலைமுறைகளாக
விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு
முன் 15 அடி கொண்ட விநாயகர் சிலை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை தான்
விற்பனை செய்து வந்தோம். ஆனால், விநாயகர் சிலை செய்வதற்கு தேவையான மூலப்
பொருட்கள், பெயிண்ட் ஆகியவற்றின் விலைகள் இரு மடங்கு உயர்ந்தது.

மேலும், ஆட்கள் கூலி 600 ரூபாய் வரை உயர்ந்ததால், 15 அடி கொண்ட உயரம் கொண்ட
விநாயகர் சிலை 20 ஆயிரம் வரை விற்று வந்த நிலையில், தற்போது 30 ஆயிரம்
ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையும் சற்று
சரிந்துள்ளதாக தெரிவித்தார்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.