ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு உலக நன்மையில் கவனம் செலுத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலி வாயிலாக மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது என கூறினார். இந்தியா ஜி-20 தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையை பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர் என தெரிவித்தார்.
அமிர்த கால திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்தியா பெற்றது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம். மேலும், இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை டிசம்பர் 1ம் தேதி முதல் ஏற்கவுள்ளது. இது உலகில் நிலவும் பல சவால்களுக்கு தீர்வு கொடுக்க இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என கூறினார்.
உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும். அதனுடன் தொடர்புடைய விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.







