நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா, மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. மேலும், பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது.
இதற்கான அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை கடந்த 13ம் தேதி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்நிலையில், பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும், நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினருக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.







