கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை
அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வானில் இருந்து தண்ணீரை ஊற்றி தீ அணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் நாதேகவுண்டன் புதூர் ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டு தீ ஏற்பட்டது. காட்டு தீயை அணைக்கும் பணியில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 210க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று காட்டுத்தீ பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் தீயானது வேகமாக பரவியது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வன பரப்பளவு தீயில் எரிந்து நாசமானது.
இதையடுத்து, இன்று காலை முதல் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க கூடிய பணிகளானது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.
கேரள மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. தீயை அணைக்கும் பணியானது இன்று மாலை வரை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.