புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!

கிராமப் பகுதிகளுக்கும், பிற வெளியூர்களுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக (PRTC) ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்போது காரைக்கால் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே தொடங்கியுள்ள போராட்டத்தைத் தொடர்ந்து, காரைக்காலில் உள்ள PRTC ஊழியர்களும் பணி நிரந்தரம் மற்றும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்காலில் உள்ள PRTC பணிமனைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், காரைக்கால் நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கும், பிற வெளியூர்களுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுச்சேரி போல் அல்லாமல், காரைக்காலில் அரசுப் பேருந்துகளின் சேவை அத்தியாவசியமாக இருப்பதால், இந்தப் போராட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணம் மேற்கொள்வோர் பேருந்து சேவைகள் இல்லாததால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

ஊழியர்களின் கோரிக்கைகள் நீண்டகாலமாகவே நிலுவையில் உள்ளதாகவும், பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் கிடைக்காததால் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், PRTC நிர்வாகமும் புதுச்சேரி அரசும் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.