தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியைத் தழுவியது. தென் ஆப்பிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடி முடித்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவனந்தபுரத்தில் கிரீன்ஃபீல்டு இன்டர்னேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், குவாஹாட்டியில் நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற 3வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டது. இந்நிலையில், 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மல்லுக்கட்டி வருகிறது.
அதன்படி முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
மழை காரணமாக 50 ஓவர்கள் கொண்ட ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. இதையடுத்து முதலில் விளையாடி தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கிளாசென் 74 ரன்களும், மில்லர் 75 ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் 48 ரன்கள் விளாசினார்.
இவ்வாறாக 40 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. இந்திய பந்துவீச்சாளர்களில் தாக்குர் 2 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்ணோய், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 86 ரன்களை எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் பதிவு செய்தார். கேப்டன் தவன் 4 ரன்களில் ஆட்டமிழக்க இஷான் கிஷன், சுபமன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
ஷர்துல் தாக்குர் 33 ரன்களை எடுத்தார். இவ்வாறாக 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 340 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை 2வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ராஞ்சி நகரில் நடைபெறவுள்ளது.