கோவையில் மகளின் திருமண அழைப்பிதழில் புத்தகங்களை மொய்யாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கோவையில் புளி அங்காடி நடத்தி வருபவர் ஜவகர் சுப்பிரமணியம். பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் பற்றாளரான இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு கடந்த 31ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், ஜவகர் சுப்பிரமணி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மொய் மற்றும் பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கைடுகள், நோட்டுப் புத்தகங்கள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஜவகர் சுப்பிரமணியம் கூறுகையில், மலைவாழ் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தங்களை பெறுவதாக தெரிவித்தார். மேலும், இந்த திருமணம் வெறும் நிகழ்வாக இல்லாமல் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி அறிவை மேம்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.







