சட்டமன்றத்திற்கு முண்டாசு கட்டிக்கொண்டும், பதாகைகளுடனும் எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழக்கத்துடன், தலையில் பச்சை வண்ண முண்டாசு கட்டிக்கொண்டு வந்தனர். விவசாயிகளை ஏமாற்றாதே, விவசாய சட்டங்களை ரத்து செய் என அவர்கள் முழக்கமிட்டனர்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ‘தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க’ என்ற பதாகையுடன் வந்திருந்தார். இதேபோல திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தும் பதாகையுடன் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார்







