நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வருமாறு பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்தியாவில் மக்களவை…

தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வருமாறு பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரையின்போது அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்க்கட்சிகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்று பாஜகவும் பல்வேறு பரப்புரை கூட்டங்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறு ஒரு கட்சி மீது மற்றொரு கட்சி தெரிவிக்கும் புகார்கள் அனைத்தும் அனுமானங்களின் பேரில் முன்வைக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை ஆராயவும், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளையும் மையமாக வைத்து விவாதம் நடத்த பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 தரப்புக்கும், மூத்த பத்திரிகையாளரான என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த கடிதம் பிரதமர் மோடி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் வசிக்கும் அரசு குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 97.31% தேர்ச்சியுடன் அரியலூர் முதலிடம்!

அந்த கடிதத்தில், இடஒதுக்கீடு, அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சொத்துகளின் மறுபங்கீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸுக்கு பொதுவெளியில் பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுதல், தேர்தல் பத்திரங்கள், சீனாவின் நடவடிக்கைகளுக்கான மத்திய அரசின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியிடம் பதில்களை கேட்டதுடன், பொது விவாதத்துக்கும் அழைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/nramind/status/1788490361439936582

மேலும், இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்தி ஆகிய இருவராலும் கலந்துகொள்ள முடியாவிட்டால், இருவரது தரப்பில் இருந்து ஒருவரை விவாதத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகலை தனது எக்ஸ் தள பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.