கரூர் அருகே 55 வயது பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த முதியவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
கரூர் மாவட்டம் சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதான ராமசாமி என்பவருக்கும் கடந்த 30 வருடமாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாளுக்கும் ராமசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பழனியம்மாள் ராமசாமியிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பழனியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அரிவாளுடன் அவர் பாலவிடுதி காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, பழனியம்மாளின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராமசாமி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







