வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ல் தாக்கல் செய்த வழக்கு வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்த்து.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
அதன் பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அவரை விமர்சித்திருந்த நிலையில், தற்போது தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.