பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அற்புதமம்மாள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த பரோல் காலம் இன்றுடன் முடிவடைவதால், பேரறிவாளன் சிறைக்கு திரும்பிச் செல்ல இருந்தார். இந்நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறைக்கு திரும்பிக் கொண்டிருந்த பேரறிவாளனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை பாதுகாப்புடன் வாணியம்பாடி வரை அழைத்து வரப்பட்ட அவர், மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்குத் திரும்பி அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில், கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று, வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போது மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில், அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய, முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.







