ஐரோப்பாவில் புதிய பாஸ்போர்ட் நடைமுறையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தற்போதுவரை அங்கீகாரம் வழங்கப்படாததால், இந்தியர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் 3வது அலையை தடுக்கும் வகையில் ஐரோப்பாவில் புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அல்லது கிரீன் பாஸ் இருந்தால் மட்டுமே ஐரோப்பியாவுக்கு பயணம் செய்ய முடியும்.
இந்நிலையில், இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் போட்டுக் கொண்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருந்துகள் முகமை இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால், இந்தியர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதேநேரத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகாரிப்பது தொடர்பாக அதனை தயாரிக்கும் சீரம் நிறுவனம் தரப்பில் இன்னும் விண்ணப்பிக்கப்படவில்லை என ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தயாரிப்பில் விண்ணப்பம் வந்தால் உரிய முறைப்படி பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜி20 மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் துணை தலைவர் ஜேபி ஃபாண்டெல்லசை சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பியாவின் புதிய பாஸ்போர்ட் நடைமுறையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்







