ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படடு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஈரோடு கிழக்கு தொகுதிகான இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவு, மார்ச் 02-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனும், மறைந்த திருமகன் ஈவேரா-வின் தம்பியுமான சஞ்சய் சம்பத் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இவர் போட்டியிடாத பட்சத்தில் இவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி வரலட்சுமி இளங்கோவன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் குடும்பத்தில் இருந்து இவர்கள் இருவரும் போட்டியிடவில்லை என்றால் காங்கிரஸ் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் , ஈரோடு காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போதைய கவுன்சிலருமான ஈபி.ரவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக நமது நியூஸ் 7 தமிழுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திருமகன் ஈவேராவை எதிர்த்து அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னத்தில் நின்று தேர்தலை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா 58,396 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட யுவராஜாவை 8904 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஈவேரா திருமகன் இன்று நம்மிடையே இல்லை. அவரது சட்டமன்ற உறுப்பினர் இடத்தை, அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே நிரப்புவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.