ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்றும், மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் குறித்து, சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட யுவராஜா, 58,396 வாக்குகள் பெற்று மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கே ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா என்பது குறித்தும் தமாகா ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல் நாளை அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.