ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி்மு.க வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
நேற்று அதிமுக பொதுக்குழு விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி கோரிக்கைகளை முறையீடாக முன்வைத்தார். குறிப்பாக அதிமுகவின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளரான தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பின்பு இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள இந்த சூழலில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விருப்பமனு பெறுவது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







