மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக தொடரும் தொகுப்பூதிய பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாக பணிபுரியும் 350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் கொட்டும் மழை என்றும் பாராமல் பணியாளர்கள் இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.
ஏற்கனவே கடந்த மாதம் போராட்டம் நடத்திய பின்னரே தொகுப்பூதிய பணியாளர்கள் சம்பளம் பெற்ற நிலையில் இம்மாதமும் தற்போது பல்கலைக்கழகத்தில் நிதி இல்லாததால் பழைய சம்பளமே வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதனால் தொகுப்பூதிய பணியாளர்கள் 350க்கும் மேற்பட்டோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
https://twitter.com/SuVe4Madurai/status/1448225739598282755
இதனை அறிந்த மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது;
காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் கொடுத்த ஊதிய உயர்வினை இந்த மாதம் நிறுத்தி வைத்துள்ளது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளேன். இவர்களது கோரிக்கை நியாயமானது.
பண்டிகை வருகின்ற காலத்தில் சென்ற மாதம் கொடுத்த நிதியையும் சேர்த்து நிறுத்தி வைத்திருப்பது என்பது நியாயமற்ற செயல். எனவே நிச்சயமாக இந்த பிரச்சனையை தமிழக முதல்வர் உடனடியாக தீர்த்து வைப்பார் என நம்புகிறேன் மேலும் இவர்களது பணியை உயர் கல்வித் துறை நிரந்தரமாக்க வேண்டும் என கூறினார்.









