தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் பேரணியில் அரசியல் கட்சிகள் எந்த வகையிலும் சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

தேர்தல் பேரணியில் அரசியல் கட்சிகள் எந்த வகையிலும் சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சிறுவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தல், பிரச்சாரங்களில் முழக்கமிடுதல் உள்ளிட்ட தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது. குழந்தைகளை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யும் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் எந்தவிதத்திலும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளாது.

அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் ஏந்துவது, வாகனத்தில் அவர்களை ஏற்றிச் செல்வது, மற்றும் பேரணியில் அவர்களை பங்கேற்க வைப்பதும் தடை செய்யப்படுகிறது. மேலும், கவிதை, பாடல், பேச்சுவார்த்தை, அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துவது போன்ற எந்த வகையிலான அரசியல் பிரச்சார சாயலை உருவாக்க குழந்தைகளை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.