கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – எம்பி கனிமொழி வலியுறுத்தல்

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் அரங்க நூலக கட்டடத்தில், “பொதுப்பள்ளிக்கான மாநில மேடை” குடியரசு நாள் கருத்தரங்கம்…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் அரங்க நூலக கட்டடத்தில், “பொதுப்பள்ளிக்கான மாநில மேடை” குடியரசு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, மருத்துவர் செந்தில் குமார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவரும் பேராசிரியருமான ப. ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எம்பி கனிமொழி, “நம்பிக்கையை தரக்கூடிய ஒரு காட்சியாக இந்நிகழ்வு உள்ளது. நாளைய சமூகம் என்பது நிச்சயம் எழுச்சி பெறக்கூடிய, கேள்வி கேட்க கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். துணை ஜனாதிபதி மிக முக்கிய கருத்தை சமீபத்தில் எடுத்துரைத்தார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என துடிக்கும் அவர்களுக்கு அந்த கருத்து சரியானதாக இருக்கும். நம் உரிமைகள் அதிரடியாக நம்மிடம் இருந்து பிடுங்கப்படுகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், எதையும் யாரும் தடுக்க முடியாது. ஒரு செயலை பார்க்கக்கூடாது என்றால், அதனை உடனடியாக பார்க்கும் நிலையை அவர்களே உருவாக்குகின்றனர். இரு வேறு மாறுபட்ட கருத்துடையவர்கள் இந்த சமூகத்தில் வாழ உரிமை உண்டு. ஆரோக்கியமான ஜனநாயகத்தின், அடிப்படை உரிமையே, பேச அனுமதிப்பது தான். எத்தனையோ போராட்டங்களை கடந்து தான், பெண்கள் படிக்கும் சூழல் இருந்தது. ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கும் போதுதான் ஜனநாயகத்தில் மாற்றம் வரும்.

எந்தவித கருத்து பரிமாற்றமோ, எதிர்க்கருத்தோ இல்லாத சூழலில்தான், சொல்லுவது மட்டுமே நியாயம் என்ற நிலையை உருவாக்கும்பொழுது, ஜனநயாகம், சுதந்திரம் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லாத சூழல் உருவாகிவிடுகிறது. யாரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமைகூட தற்போது மக்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஒன்றிய அரசு தொடர வேண்டுமா என்பதை நாம் அடுத்த மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நாடாளுமன்றத்தில் யாருடைய கருத்துக்களையும் முறையாக கூறவிடவில்லை என்பது தான் நிதர்சனம். எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போது, பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள். உங்களுக்கும், எங்களுக்கும் பஞ்சாயத்து தேவையில்லை. எங்கள் குழந்தைளுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

காசியில் தமிழ் சங்கமம், பட்ஜெட்டில் திருக்குறள் உரை சொல்லுவீர்கள். தமிழ் சங்கமம் நடத்துகிறோம் என தமிழ்நாட்டில் இருந்து யாரையும் அழைக்காமல் சங்கமம் நடத்தினர். தமிழ் சங்கத்திற்கு தமிழ்நாட்டில் அரசு பிரதிநிதிகளை கூட அழைக்காமல் நடத்துகிறீர்கள். அதற்காகதான் அரசு சார்பாக சென்னை சங்கமத்தை நடத்திக் காட்டினோம். கடந்த 8 ஆண்டுகளில், தமிழுக்கு ஒன்றிய அரசாங்கம் செலவழித்துள்ள தொகை 74 கோடி மட்டுமே. பல மாநிலங்களில் இந்தி படித்தால் எங்கயோ போய்விடலாம் என சொல்கிறார்கள். ஆனால், இந்தி இருக்கும் மாநிலங்களில் 10 ஆயிரம் பேருக்கு, ஒரு மருத்துவர் தான் இருக்கிறார்” என்று எம்பி கனிமொழி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.