31 C
Chennai
June 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது நேற்று வீடியோ வெளியிட்டது மட்டுமின்றி அதில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் விமர்சித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதை கொச்சைப்படுத்தி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் கூட இதயம் இல்லை. முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் தேவையில்லாமல் அவதூறாக பேசுகிறார். அமலாக்கத்துறை சோதனை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை.

அமலாக்கத்துறை அதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக் கொள்கிறார். சோதனை குறித்து பேசுவதற்கு இபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை. உடல்நலம் பாதித்தவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு இருக்கிறது. கட்சி தொண்டருக்கு ஏதேனும் ஒன்று என்றால் பதறிப்போய் பார்க்கும் கட்சிதான் திமுக. மாரடைப்பு என்பது எப்போது எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம். இதுகூட தெரியாத முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி எப்படி இருந்தார் என்பதுதான் தெரியவில்லை. ESI மருத்துவமனை அறிக்கையை எடப்பாடி பழனிசாமி கொச்சைபடுத்தியுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பழைய வழக்குகளை திமுக இன்னும் வாபஸ் பெறவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான்.

பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு ஒரு பேச்சும் பேசுவது நாங்கள் அல்ல. செந்தில் பாலாஜி மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டால்தான் அவர் குற்றவாளி. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்திலும் இபிஎஸ் தவறான தகவலை பரப்புகிறார். இப்படி தேவையில்லாமல் உண்மைக்கு மாறாக பேசி வரும் எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading