துணைக் குடியரசுத் தலைவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5 ஆம் தேதி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுகவிலிருந்து பரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க கோரியிருந்தார். இதனையடுத்து அவரை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து  நீக்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து  டெல்லி சென்று வந்த  செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தாக கூறி பரபரப்பை உண்டாக்கினார்.

இந்த நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி இன்று  காலைசென்னை யிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வேலுமணி, கே. பி. முனுசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களும்  உடன்  சென்றுள்ளனர்.

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி  அங்கு துணை குடியரசுத் தலைவர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது , திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வீ சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு 8 மணிக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஏற்கனவே தினகரன் மற்றும் ஓபிஎஸ் விலகியுள்ளனர். மேலும் அதிமுகவிலிருந்து பரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க கோரிய செங்கோட்டையனின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் இன்றைய அமித்ஷா-பழனிசாமி சந்திப்பானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.