அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சரக பதவியேற்றுள்ளார். அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற அதிமுக தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 7- ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
கட்சி அலுவலகத்துக்கு வெளியே இருதரப்பு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்று எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்யாமல் கூட்டம் முடிந்தது. இதையடுத்து 10 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் நடக்கும் என்றும் அதில் சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வு செய்யப் படுவார் என்று கூறப்பட்டது.
அதன்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடந்தது.
இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.







