நாமக்கல் அருகே 100 நாள் வேலை பணியின் போது கதண்டு வண்டு கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர். எருமப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நீர்வரத்து வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் 120 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மரம் ஒன்றிலிருந்து திடீரென பறந்த கதண்டு வண்டுகள் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களை கடித்ததில் 2 பெண்கள் உட்பட 13 காயம் அடைந்தனர்.
உடனடியாக காயமடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.
இது போன்று 100 நாள் வேலைத்திட்ட களப்பணியில் ஈடுபடுவோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முதலுதவிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அனகா காளமேகன்







