திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு உழைப்பால் வந்தவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.…

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு உழைப்பால் வந்தவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக திரௌபதி முர்மு இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரி வருகை புரிந்துள்ளார். புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புற்று நோய்களுக்கான அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளி குத்துவிளக்கு அளித்தும், முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளி விநாயகர் சிலையையும் நினைவு பரிசாக வழங்கினர்.

பின்னர் விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

பெண்களின் சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் குடியரசு தலைவரின் வருகை வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. பட்டங்கள் ஆள்வதில் பெண்கள் முன் வந்துள்ள நிலையில் சட்டத்தை ஏற்றுவதில் குடியரசு தலைவர் அமைந்தது நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு வந்ததற்கு மிகுந்த உழைப்பு தேவை. புலியை முறம் கொண்டு விரட்டிய நமது பெண்களின் வீரத்தை குடியரசு தலைவரிடம் பார்க்கின்றேன்.

சாதாரண குடிமகளும் குடியரசுத்தலைவராக முடியும் என்று திரௌபதி முர்மு நிரூபித்துக் காட்டி உள்ளார். ஒட்டுமொத்த பெண்களின் பெருமையாக நமது குடியரசு தலைவர் இருக்கிறார் என புகழாரம் சூட்டினார்.

இதனையடுத்து புதுச்சேரி வில்லியனூரில் 50 படுக்கைகளுடன் ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆயூஷ் மருத்துவமனையை காணொளி வாயிலாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.