காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் மீது திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப் பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களின் மறைவுக்கு பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, மமக, கொமதேக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி தமிழ்நாட்டின் ஜீவநதி. மக்களின் உயிர் நாடி. காவிரி நீர் தொடர்பாக பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எவ்வளவு போராட்டம் கடந்த காலத்தில் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு நீரைப் பெறுவதற்காக உடலை வருத்தி உண்ணாவிரம் இருந்தார் ஜெயலலிதா. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடச் செய்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு.
இதையும் படியுங்கள் : செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை
மத்திய அரசை வலியுறுத்தி மட்டுமே தீர்மானம் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நியாயமாக தர வேண்டிய நீரை தர வேண்டும் என தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நீரை கர்நாடக அரசு திறந்து விடாதது சரியல்ல என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றபோது அங்குள்ள முதலமைச்சரிடம் பேசக்கூடாதா? என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பேசினால், உச்சநீதிமன்றத்தில் பேசித் தீர்த்துக்கொள்வோம் என்பார்கள். அவ்வாறு பேசுவது தற்கொலை செய்வதற்கு சமம். உரிமையை அடகு வைப்பதற்கு சமம்” என்று கூறினார்.
பின்னர், “காவிரி விவகாரத்தில் துணிச்சலோடு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை அதிமுக தொடர்ந்தது. அந்த துணிச்சல் திமுக அரசுக்கு இல்லை. நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் பேசவில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிய ஆதாரத்தை நான் காட்டவா? துணிச்சலை பற்றி எங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம். தவறான தகவலை கூறுவதை தான் மறுக்கிறோம். அது என் கடமை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிகமான அழுத்தம் கொடுத்தால் தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதை தான் சொல்கிறேன். அதில் என்ன தவறு. இங்குள்ள பாஜக தண்ணீர் திறக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் பாஜக தண்ணீர் கொடுக்க கூடாது என்கின்றனர். கர்நாடகத்தில் எந்த தேசிய கட்சி வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமம். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க அனைவரும் சேர்ந்து செயல்படும் பொருட்டு அதிமுக துணை நிற்கும் என்று கூறியதோடு, தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.