சில்லறை வணிகத்தை அந்நியர்களை கைப்பற்றிக் கொள்ள விடக்கூடாது, சுய தொழில் செய்து அதை நாம் அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில் வருகின்ற மே 5ம் தேதி சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட வணிகர் சங்க பேரவைத் தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாகச் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை எவ்வாறு நடத்த வேண்டும்,அதற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரவை நிர்வாகிகள் அனைவரையும் கலந்து கொள்ள செய்தல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும் இக்கூட்டத்தில் பேசிய த.வெள்ளையன் கூறியதாவது:அந்நிய மற்றும் ஆன்லைன் வணிக நிறுவனங்களால் பல்வேறு வகையில் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்,இதற்கு அரசியல் கட்சியினரும் துணை போகின்றனர்.அதை வணிகர்கள் முறியடிக்கிற வகையில் செயல்பட வேண்டும்.அந்நிய குளிர்பானங்களான கோக்.பெப்சியை எதிர்த்துக் கூட பல கட்ட போராட்டங்களை நடத்தினோம்,ஆனாலும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறினார்.இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-வேந்தன்