திமுக மீது சந்தேகப்பட வேண்டாம்! – விசிக தலைவர் திருமாவளவன்

பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவிவிட்டதாக சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவிவிட்டதாக சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதவை நிராகரிக்க முடியாது. காலம் தாழ்த்த முடியாது என்பதால் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : இந்திய அளவிலான அழகிப் போட்டியில் பங்கேற்ற கோவை திருநங்கை – 3ம் இடம் பிடித்து அசத்தல்!

இது தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றி. ஆளுநர் அவரின் பதவியை, பொறுப்பை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டரைப் போல பேசியும் செயல்பட்டும் வருகிறார். அவர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுகிறார். சனாதானக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறார்.

அப்படிப்பட்ட ஆளுநரின் அணுகுமுறைகளை கண்டித்து, வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம், ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

ஆளும் கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ, சட்ட வரையறைகளின்படியே பிரதமரை வரவேற்கும் முறையில் திமுக செயல்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் மற்றும் பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத போக்கினை மிக வெளிப்படையாகவும், வரம்பு மீறாமலும் கண்டிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவை வீழ்த்துவதே லட்சியம் என உறுதிப்பட கூறியிருக்கிறார். எனவே பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவிவிட்டது என்று சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.