36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரிகளில் தனித்தனி வகுப்புகள் சரியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?

இரு பாலாரும் கூட்டாக படிக்கும் கோ எஜிகேஷன் முறையை ஒழிக்க அமைச்சர் பொன்முடி முயலுவது பிற்போக்கான சிந்தனை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் அதிகளவில் உயர் கல்வி படிப்பைத் தொடர வேண்டும் என்பதற்காக பெண்கள், ஆண்களுக்கு தனித்தனி வேளைகளில் கல்லூரி வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டெல்லி அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோ எஜிகேஷன் முறையில் படிக்கும் மாணக்கர்களின் திறன் எப்படி உள்ளது என ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில்,  கோ எஜிகேஷன் முறையில் 10 வகுப்பு படித்த மாணக்கர்கள் 88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் மட்டுமே கற்கும் பள்ளிகளில் படித்த மாணவிகள் 82 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், மாணவர்கள் மட்டுமே கற்கும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 74.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், பனிரென்டாம் வகுப்பிலும் கோ எஜிகேஷனில் படித்த மாணக்கர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்ச்சி விகிதமாகும். அதேபோல் பாலின சமத்துவத்தை பேணி பாதுகாக்க கோ எஜிகேஷனே சிறந்த வழி என உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் அமைச்சர் பொன்முடி, பெண்கள், ஆண்களுக்கு தனித்தனி வேளைகளில் கல்லூரி வகுப்புகளை நடத்துவது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது என கூறியிருப்பதற்கு பல்வேறு இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கல்வியை அழித்தால்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்படாது. எனவே கல்வியை அளிக்க அமைச்சர் துடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் தா நெடுஞ்செழியன் கூறியதாவது, கல்வி என்பது அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. அவர்கள்தான் பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிர்கால சந்ததியினர் சிந்திக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருகின்றனர். உயர்கல்வி முடித்த பின்னர் வேலைக்கு செல்லும் இடத்தில் ஆண்களும், பெண்களும் இணைந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் வரும்போது, இரு பாலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இத்திட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும், சர்வதேச அளவில் கோ எஜிகேஷனின் அவசியம் குறித்தும், பாலியல் சமத்துவம் குறித்தும் பேசிவரும் வேளையில், பிற்போக்கான சிந்தனை தேவையற்றது என்கிறார் நெடுஞ்செழியன்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன் கூறியதாவது, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையிலும் மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்பு நடத்த பரிசீலனை நடப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு பிற்போக்குத் தனமானது. ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து கல்வி பெறுவது தான் பாலின சமத்துவத்திற்கு வழிகோலுமே தவிர, இப்படிப் பாகுபாடு காட்டுவது எந்த வகையிலும் பெண் கல்வியை ஊக்குவிக்காது. அரசு பெண்கல்வியை ஊக்குவிக்க வேண்டுமெனில் கூடுதல் கல்லூரிகளைத் திறந்து வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுக்க பாலின சமத்துவக் கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்க வேண்டும். அதை விடுத்து அறிவியல்பூர்வமற்ற முறைகளை அறிமுகப்படுத்துவது மாணக்கர்களிடையே இடைவெளியையும் பாகுபாட்டையுமே அதிகரிக்கும்.

ஆகவே அரசு இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான வழிமுறைகளைக் கைவிட்டு பெண்கல்வி வாய்ப்பை அதிகரிக்க ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசக் கல்வியளிப்பது போன்ற  ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

கோ எஜிகேஷன் முறையை அதிகரிக்க வேண்டுமே ஒழிய, அதை ஒழிக்க அரசு முயலக்கூடாது என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading