“பிரதமருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு தெரியாதா?” – அமைச்சர் மனோ தங்கராஜ்

பிரதமருக்கு பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும் என்று இந்த அரசுக்கு தெரியாதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற…

பிரதமருக்கு பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும் என்று இந்த அரசுக்கு தெரியாதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டில் பாஜக ஆளும் பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு உள்ளது. அண்ணாமலை போன்று வெறுப்பு பிரச்சாரம் செய்வர்களுக்கு கூட பாதுகாப்பு உள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும் என்று இந்த அரசுக்கு தெரியாதா? மக்களுக்கு தெரியும் என்ன நடந்ததென்று. அற்ப ஆசைக்காக செய்யக்கூடிய விளம்பர யுக்தி தான் இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம்.

தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. பல நிறுவனங்கள் வியாபார யுக்தியுடன் பல திட்டங்களை அறிவித்து வருவது போல் அரசு தெரிவிக்க முடியாது. ஏனென்றால் இது பொதுமக்கள் பணம். காலசூழலுக்கு ஏற்ப புதிய யுக்திகளை கையாண்டு வருகிறோம். விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவோம். அரசு கேபிள் டிவி விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாஜக மக்கள் ஆளுநரை சந்திக்கும்போது கிடப்பில் கிடக்கும் விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்க கேட்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையில் பாலமாக அமைய வேண்டும். மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு என்னென்ன செய்ய முடியும் என்று செயல்படுவதை தான் தலையாய பொறுப்பாக கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில், கையெழுத்து வாங்குவதற்குக்கூட அவரிடம் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா எனத் தெரியவில்லை. சட்டங்களை இயற்றுவது தனிநபர் செய்யக்கூடிய வேலை அல்ல. அரசு கொண்டு வரும் சட்டத்தில் பிரச்னை இருந்தால் மட்டும் தான் கேள்வி எழுப்ப முடியும். இல்லை என்றால் ஆளுநர் கூட தடை செய்ய முடியாது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.