அதிமுகவில் எடப்பாடி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பேசி முடிவுக்கு வரலாம் என எடப்பாடி பழனிச்சாமி சண்முகம் தரப்பிற்கு அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் யார்? மற்றும் கொறடா யார் உள்ளிட்டவை குறித்து தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிய உள்ளனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள கருத்து மோதல் பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்ளலாமா இல்லை பொதுக்குழு கூட்டி தீர்க்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.







