ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தரமற்ற முறையில்
கட்டியதற்காக கட்டுமான பணிகளை கவனிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் ரூ.3.5கோடி
மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள்
கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை தமிழக ஆதிதிராவிட நலத்துறை
அமைச்சர் ,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
ஆகியோர் ஆய்வு செய்ய வருகைப்புரிவதற்கு முன்னர் அக்குடியிருப்புகளை
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது இருளர் பழங்குடியினருக்காக ஒவ்வொரு
குடியிருப்புகளும் ரூ.4லட்சத்தி 62ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்
இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரிய வந்ததை கண்டு
கடும் அதிர்ச்சையடைந்தார். இது குறித்து விளக்கம் கேட்க
இக்குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து கட்டுமானம் குறித்து முறையிட்டு அவரை கடுமையாக கடிந்து கொண்டார்.
குறிப்பாக ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இவ்வாறு தரமற்ற
வகையில் கட்டுவது எவ்விதத்தில் நியாயம் என்றும்,இது போன்ற செயலில் ஈடுபட
வேண்டாம் என பலமுறை நடந்த கூட்டங்களில் அறிவுறுத்தியும்,நீங்கள் இவ்வாறு பணியை
மேற்கொண்டுள்ளீர்கள்,இது போன்று ஈடுபட்டால் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸிடம்
பிடித்து தான் கொடுக்க வேண்டும் என்றும், தரமான முறையில் கட்டித்தர
முடியவில்லை என்றால் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரீடும் என கடுமையாக
கடிந்துக் கொண்டார்.மேலும் தரமற்ற வகையில் குடியிருப்புகளை கட்டும் இந்த
ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மாற்று
ஒப்பந்ததாரர் மூலம் பணியை மேற்கொள்ளுங்கள் என மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட
இயக்குனர் ஸ்ரீதேவியிடம் அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக பணிகளை முறையாக கவனிக்காத வாலாஜாபாத் வட்டார ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகிய இருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் தற்காலிக பணியிட நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஏழைகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் குடியிருப்பு கட்டுமான பணியினை சரியான முறையில் மேற்பார்வை செய்யாததே இவர்களுடைய பணியிடை நீக்கத்திற்கு காரணமாக உள்ளது.
ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல்லுறவு
மையத்தில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளிடம் மனுக்களை பெற்ற தா மோ அன்பரசன் அந்த மனுக்கள் மீது கடந்த வாரம் அதிகாரிகள் மத்தியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்
விளக்கம் கேட்ட பொழுது பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்
இருந்ததால் அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் அதிகாரிகள் அலுவலகத்திலேயே
உட்கார்ந்து கொண்டு மனுக்கள் மீது நேரடியாக சென்று கள ஆய்வு செய்வதில்லை எனவே
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சிறு குறு
நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அரசு ஊழியர்களை எச்சரித்தது
குறிப்பிடத்தக்கது.