“தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்” – கார்த்தி சிதம்பரம் எம்பி

 “அடித்து சொல்கிறேன் மீண்டும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை…

 “அடித்து சொல்கிறேன் மீண்டும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தேர்தல் பத்திரம் மூலம் நிதி இனிமேல் வாங்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லவில்லை.  90 சதவீத பணம் பாஜகவிற்கு சென்று சேர்ந்துவிட்டது.  அவர்கள் வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்கள்.  இனிமேல் வாங்க வேண்டாம்,  வாங்கி இருந்தால் பட்டியலை கொடுக்க சொல்லி இருக்கிறார்கள் தவிர வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியுள்ளார்களா.? இதனால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் வராது.  மற்ற எந்த கட்சிக்கும் இந்த அளவிற்கு நிதி வரவில்லை.  இது வரவேற்கக் கூடிய தீர்ப்பு தான்.  ஆனால், இதில் உண்மையான தாக்கம் இருக்குமேயானால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும்.

அரசியல் கட்சியில் சீட்டு கேட்பது அவர் அவர்களின் உரிமை. சுதர்சன் நாச்சியப்பன் கடந்த முறையும் சீட்டு கேட்டார்.  இந்த முறையும் கேட்டுள்ளார். ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மத்திய தேர்தல் கமிட்டி தான்.  தொகுதி யாருக்கு என்பதை கூட்டணி கட்சி தலைமை முடிவெடுக்கும்.  அதன் பிறகு தான் வேட்பாளர் முடிவு செய்யப்படும்.  ஒரு சீட்டுக்கு பலர் விரும்புவது அந்த கட்சியின் உயிரோட்டத்தை காட்டுகிறது.

திமுக தான் கூட்டணிக்கு தலைமை.  அவர்கள்தான் பங்கிட்டு கொடுப்பார்கள்.  புதிதாக கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது.  அவற்றை கருத்தில் கொண்டு அனைவருக்கும் தொகுதி பகிர்ந்து அளிக்கப்படும்.  அனைத்துக் கட்சிகளும் நிறைய இடங்களை கேட்பார்கள்.  ஆனால் இறுதியில் 39 தொகுதிகளுக்குத் தான் கொடுக்க முடியும்.  ஒரு ஒரு மாநிலத்திலும் தேர்தல் இலக்கணம் உள்ளது.  அதை பொறுத்து அரசியல் இலக்கணம் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. என்னுடைய பார்வை,  சிந்தனை தமிழ்நாடு தான்.  அடித்து சொல்கிறேன் மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பே கிடையாது.  மேகதாது அணை அவர்களின் உரிமை. அவர்கள் அதை செய்கிறார்கள்.  எங்களின் எதிர்ப்பை தெரிவிப்போம்.  காவிரி ஆணையத்திடம் முறையிடுவோம்.  உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம்.  பொதுமக்கள் அனைவருமே மத்திய அரசிற்கு எதிராக தான் இருக்கிறார்கள்.  விலைவாசி உயர்ந்துள்ளது, விவசாயிகளுக்கு கொள்முதல் குறைந்துவிட்டது.  தமிழ்நாட்டில் பாஜகவின் மீது எப்படி கோபம் உள்ளதோ அதைப்போல மற்ற மாநிலங்களிலும் பாஜகவின் மீதான கோபத்தை வெளியில் கொண்டு வந்தால் கூட்டணிக்கு நல்லது.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்பி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.