சின்னவர் என்ற பட்ட பெயரை வைத்து கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில்
கட்சியின் மூத்த நிர்வாகிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது;
“பட்டப்பெயர்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் எப்பொழுதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன். சின்னவர் என்ற பட்ட பெயரை வைத்து கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
காலை உணவு திட்டத்தின் மூலம் தினமும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த முறை ஆட்சி செய்த அதிமுக ஒட்டு மொத்த மாநில உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. பிரதமர் மோடி 2020ல் இந்தியாவை வல்லரசாக மாற்றுவேன் என்று கூறி, தற்போது 2040ல் வல்லரசாக்குவேன் என்று கூறி வருகிறார்.
நாங்கள் வழங்கும் “பொற்கிழியை” விட திமுக தொண்டர்கள் கழுத்தில் கிடக்கும் கறுப்பு, சிகப்பு துண்டைத்தான் பெரிதாக நினைப்பார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட இந்த முறை அதிகமான வாக்குகளை பெற வேண்டும்”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.







