பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றி குவாரி அமைக்க விதித்துள்ள தடையை மீறி திமுக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமாக திமுக உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுயநல நோக்கத்துடன் செயல்படும் திறனற்ற திமுக அரசு தனது ஆட்சி காலம் முடிவதற்கு முன்பு தமிழகத்தின் மொத்த வளத்தையும் சூறையாடி விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதா என்ன? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே 1 கி.மீ. சுற்றளவிற்கு குவாரிகள் இயங்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளதை தமிழக அரசு, கடந்த 14-12-2022 அன்று வெளியிட்டிருக்கும் அரசாணை மீறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜனவரி 2022 தேசிய பூங்கா மற்றும் சரணாலயங்களை 10 கி.மீ. சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட வனமண்டலமாக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்ற விதிமுறைகளை வெளியிட்டது. பிப்ரவரி 2011- மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பாதுகாக்கப்பட்ட வனமண்டலங்களை உருவாக்க புது விதிமுறைகளை வெளியிட்டது.
ஜூன் 2022- உச்சநீதிமன்றம் 2011ம் ஆண்டு வழங்கப்பட்ட விதிமுறைகளின் படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 1 கி.மீ. சுற்றளவு வரை பாதுகாக்கப்பட்ட வனமண்டல விதிமுறைகளை அனைத்து மாநில அரசும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வெளியிட்டது.
விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் என்பதை நிரூபிக்கும் வகையில் குவாரிகளிடம் வசூல் வேட்டை முடிந்தவுடன் பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.
இந்த அரசாணையை உடனடியாக @arivalayam அரசு திரும்பப் பெற வேண்டும். pic.twitter.com/yCTlFQVNNi
— K.Annamalai (@annamalai_k) December 21, 2022
டிசம்பர் 14, 2022; இதற்கு முன்பு தமிழக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை வெளியிட்ட அரசாணையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே 1 கி.மீ. சுற்றளவு வரை குவாரிகள் இயக்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ் வாங்கி, தற்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த திறனற்ற திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பின் குவாரிகளிடம் இருந்து வசூல் வேட்டையை துவங்க உருவாக்கப்பட்ட வழிமுறை தான் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை.
தடை விதித்த பின் அனைத்து குவாரி முதலாளிகளிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது திமுக. தற்போது வசூல் முடிந்தவுடன் தாங்கள் பிறப்பித்த தடையை நீக்கி குவாரிகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமான திமுக தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கும் அரசாணையை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே 1 கி.மீ. சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கையாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.