இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தாகாவில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கே.எல்.ராகுல், வலைப் பயிற்சியில் ஈடுபட்ட போது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் நாளை போட்டியை சந்திக்க தயாராக இருப்பதாகவும், கே.எல்.ராகுல் பங்கேற்பதில் இப்போது வரை சந்தேகம் இல்லை எனவும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கே.எல்.ராகுல் விளையாடவில்லை என்றால், இரண்டாவது டெஸ்ட்டில் சதேஷ்வர் புஜாரா இந்திய அணியை வழி நடத்துவார் எனவும், ராகுலுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் இடம்பெறுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, முகமது சமி, நவ்தீப் சைனி உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கே.எல். ராகுல் காயம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.







