தருமபுரியில் நடந்த தேர் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் மழமழவென சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் விழுந்ததில் 5 பேர் தேரின் அடியில் சிக்கிக் கொண்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சரவணன், மனோகரன், மகேந்திரன் ஆகிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் மனோகரன் (வயது57), சரவணன் (வயது 50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், மற்றொரு நபரான மகேந்திரன் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.