பிபிசி யாருக்கும் பயப்பட்டோ, சாதகமாக நடந்து கொண்டோ, உண்மைச் செய்திகளை கொடுப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று பிபிசியின் தலைமை இயக்குனர் டிம் டேவி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அம்மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள் : தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்
இதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பிபிசியின் தலைமை இயக்குனரான டிம் டேவி, இந்தியாவில் உள்ள பிபிசி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பிபிசி யாருக்கும் பயப்பட்டோ, சாதகமாக நடந்து கொண்டோ, உண்மைச் செய்திகளை கொடுப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்கும் நமது திறனை விட முக்கியமானது எதுவுமில்லை.
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிபிசிக்கு எந்த திட்டமும் இல்லை. நாம் ஒரு நோக்கத்துடன் இயக்கப்படுகிறோம். எனவே அச்சமின்றி, பாரபட்சமின்றி செய்திகளை மக்களுக்கு கொடுங்கள். சுதந்திரமான, பாரபட்சமில்லாத பத்திரிகை மூலம் உலகளவில் இருக்கும் பிபிசி வாசகர்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதே நமது கடமை” என்று தெரிவித்துள்ளார்.









