டெல்லி குற்றப்பிரிவு காவலர்கள், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த வாரம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாகவும், ஒரு எம்.எல்.ஏ.-வுக்கு தலா 25 கோடி ரூபாய் என 7 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை டெல்லி மாநில பாஜகவினர் மறுத்தனர். மேலும், பேரம் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கெஜ்ரிவாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான உயர்மட்டக்குழு டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்தது.
இந்நிலையில், டெல்லி போலீசின் குற்றப்பிரிவு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வீரேந்திர சச்தேவா கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவாலின் போலி குற்றச்சாட்டுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளோம். மேலும், புகார் மனு அளித்தோம். போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது கெஜ்ரிவால் அவரது குற்றச்சாட்டு, அணுகப்பட்ட அவரது கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் யார்? மற்றும் அவர்களிடம் பேசியது யார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப். 02) இரவு இதேபோல் முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டிலும், அமைச்சர் அதிஷி வீட்டிற்கும் போலீசார் வருகை தந்தனர். காவலர்கள் அளிக்க முயன்ற நோட்டீஸை கெஜ்ரிவால் தரப்பு பெற மறுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.