தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்தார் கொனிஜெட்டி…

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்தார் கொனிஜெட்டி ரோசய்யா. குண்டூர் இந்துக் கல்லூரியில் வணிகவியல் பயின்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1968, 1974 மற்றும் 1980 -ஆம் ஆண்டுகளில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன்முறையாக மரி சென்னாரெட்டி அரசில், சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிறகு அவர் பல முதலமைச்சர்களின் அமைச்சகங்களில் பல முக்கிய இலாகாக்களை வகித்துள்ளார்.

2004-09-ஆம் ஆண்டு சிராலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 12வது சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2009 தேர்தலுக்கு முன், நேரடித் தேர்தலில் போட்டியிடாமல் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவையில் நீண்ட அனுபவம் கொண்ட ரோசய்யா, செப்டம்பர் 3, 2009 முதல் நவம்பர் 24, 2010 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

தமிழக ஆளுநராக ஆகஸ்ட் 31, 2011 அன்று பதவியேற்றார். ஆகஸ்ட் 30, 2016 வரை தமிழக ஆளுநராகப் பணியாற்றிய அவர், பின்னர் ஐதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.