“நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை” – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேர்காணல் ஒன்று விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“இருமொழிக் கொள்கை மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நிர்ணயம் குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

இது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களின் நேர்காணல்களைப் பாருங்கள். இப்போது உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள்.

இது முரண்பாடல்ல – இது அவர்களின் இருண்ட அரசியலின் கருப்பு நகைச்சுவை. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.