சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி – சென்னை இடையே, நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் புதுச்சேரி – சென்னை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் எனவும் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இதுவரை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 54 மில்லி மீட்டர் மழை பொழிந்துள் ளது எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.








