கூட்டுறவுத்துறையின் செயல்பாடு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதற்கு பதிலளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் “கூட்டுறவு இயக்கம் சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கமாகும். கொள்கை ரீதியாக கூட்டுறவு இயக்கம் செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் கூட்டுறவுத்துறையின் செயல்பாட்டு திறன், தகவல் தொழில் நுட்ப ரீதியாக முன்னேரே வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தினமும் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. கூட்டுறவுத்துறையை வெளிப்படைத் தன்மையுடன் இன்னும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு நிதியமைச்சராக கூட்டுறவு சங்கங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டால் அரசு இயங்குகின்றது. மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத்துறை மாற்றப்பட வேண்டும்” என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும். மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்காக மட்டுமே பயணிக்கிறோம். மக்களை திருப்திப்படுத்தினால் போதும். ரேசன் கடையையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை.
முதலமைச்சர், துறை அதிகாரிகள், பொதுமக்கள் திருப்தியாக இருக்கும் போது ஒருவர் மட்டும் திருப்தி அடையவில்லை என்று கூறினால் எங்கு குறை உள்ளது என்பதை அவரிடமே கேளுங்கள். சுட்டிக் காட்டட்டும். வேலைவாய்ப்பு முதல் அனைத்து திட்டங்களையும் மக்கள் திருப்தி அடையும் அளவிற்கு செய்து வருகிறது கூட்டுறவுத்துறை” என்று தெரிவித்தார். திமுக அமைச்சர்களிடையே ஏற்பட்ட இந்த கருத்து மோதலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.