ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் ஏப்.20 வரை நீட்டிப்பு! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவலை ஏப்ரல் 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…

போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவலை ஏப்ரல் 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து,  ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்சிபி) மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர்.  தொடர்ந்து,  ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான சதா,  முகேஷ், முஜிபுர் ரகுமான்,  அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, கடந்த ஏப். 9-ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.  இந்த நிலையில், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில்,  நீதிபதி சுதிர்குமார் சிரோஹி முன்பு ஜாபர் சாதிக் உட்பட 5 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து,  ஜாபர் சாதிக்,  சதானந்தம்,  முஜிபுர்,  முகேஷ்,  அசோக் குமார் ஆகிய 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 20 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும்,  குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணை வரும் 20 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.