தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், 104 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாமை அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் ஆயிரத்து 690 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி பெற்று, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதாகக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும் என்றார்.
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவு கைவசம் உள்ளதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.







